இந்தியப் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
IMF வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீட்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த ஒரு தசாப்தத்தில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்துறை விரிவாக்கம், சேவைத் துறையின் நிலையான வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றம் மற்றும் முதலீடுகளின் அதிகரிப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக விளக்கப்படுகின்றன.
உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் கூட, இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கதாக IMF சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்தால், வரும் ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறும் சூழல் உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தின் கடந்த 10 ஆண்டுகால வளர்ச்சி நிலை, எதிர்கால இலக்குகள் மற்றும் உலகளாவிய தரவரிசையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து வரைகலை விளக்கங்களுடன் இந்த வீடியோவில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சி கோரியிருந்த ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சியாகும். இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வகையில், தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 10 விருப்பச் சின்னங்களில் ‘விசில்’ முதலிடத்தில் இடம்பெற்றிருந்தது. கட்சித் தலைவர் விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஒரு புதிய அரசியல் கட்சிக்கு மாநில அளவில் ஒரே சின்னம் வழங்கப்படுவது, அந்தக் கட்சியின் அடையாளத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ‘விசில்’ சின்னம் எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் மாற்றத்தைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான குரல் அல்லது புதிய அரசியல் தொடக்கத்தின் குறியீடாக இதனை த.வெ.க. பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இதுகுறித்து கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “எங்கள் தலைவர் விரும்பிய விசில் சின்னமே கிடைத்துள்ளது. இது கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய ஆரம்ப கட்டமாகும்” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், அவர்கள் பயன்படுத்தி வந்த ‘டார்ச் லைட்’ சின்னம் பொதுச் சின்னமாக மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சின்னங்களும் இப்போதே கவனம் பெறத் தொடங்கியுள்ளன.
2026-ல் முழுமையாக அப்டேட் ஆகும் ஐபோன்கள்… விபரம் என்ன? செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய அளவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அந்த போட்டியை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய திட்டத்தை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2026-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு AI அடிப்படையிலான மிக முக்கியமான திருப்புமுனை ஆண்டாக அமையக்கூடும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐ போட்டியில் ஏன் பின்னடைவை சந்தித்த ஆப்பிள்? ஓபன் ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலேயே ஏஐ துறையில் தீவிரமாக கால்பதித்துவிட்டன. ChatGPT Google Gemini Microsoft Copilot போன்ற ஏஐ சேவைகள் மிக வேகமாக வளர்ச்சி கண்டன. இதற்குப் பின்னணியாக, ஆப்பிள் 2024-ஆம் ஆண்டில்தான் ‘Apple Intelligence’ என்ற தனது ஏஐ தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதனால், போட்டியாளர்களை விட ஆப்பிள் சற்றே தாமதமாக ஏஐ பயணத்தை தொடங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. Apple Intelligence: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? Apple Intelligence மூலம், Writing Tools Clean Up (புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்கும் வசதி) On-device AI processing போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், கூகுள் ஜெமினி ChatGPT Copilot போன்ற ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிளின் ஏஐ அம்சங்கள் அதே அளவிலான திறனை வழங்கவில்லை என பல தொழில்நுட்ப விமர்சகர்கள் கூறினர். புதுப்பிக்கப்பட்ட Siri – இன்னும் முழுமை பெறவில்லை Apple Intelligence-இன் முக்கிய அங்கமாக கருதப்பட்ட புதுப்பிக்கப்பட்ட Siri, இன்னும் முழுமையான ஏஐ அசிஸ்டென்ட் அனுபவத்தை வழங்கவில்லை என்பதே ஆப்பிள் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உள்ளது. இயற்கையான உரையாடல் திறன் கான்டெக்ஸ்ட் புரிதல் ஆப்-டூ-ஆப் செயல்பாடுகள் போன்ற விஷயங்களில் Siri, போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளதாக விமர்சனம் செய்யப்படுகிறது. 2026-ல் ஆப்பிளின் ‘மாஸ்டர் பிளான்’ என்ன? தொழில்நுட்ப வட்டார தகவல்களின் படி, 2026-ல்: முழுமையாக ஏஐ-ஆதரவு பெற்ற Siri ஐபோன்களில் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட Apple Intelligence அதிக சக்தி வாய்ந்த on-device AI processing தனியுரிமையை மையமாகக் கொண்ட ஏஐ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம், AI போட்டியில் ஆப்பிள் தன் இழந்த முன்னிலையை மீட்டெடுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. முடிவாக AI உலகில் தாமதமாக நுழைந்தாலும், “சரியான நேரத்தில், சரியான முறையில்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதே ஆப்பிளின் நீண்டகால யுக்தியாக இருக்கலாம். 2026-ல் அப்டேட் ஆகும் ஐபோன்கள், வெறும் ஹார்ட்வேர் அப்டேட் அல்ல முழுமையான AI அனுபவத்தை வழங்கும் சாதனங்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், அதையே ஆயுதமாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’, ‘ஆன்லைன் விசாரணை’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மூத்த குடிமக்களை மனதளவில் மிரட்டி, அவர்கள் வாழ்நாள் சேமிப்பை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மும்பையில் நடந்த சமீபத்திய ஒரு சம்பவம், இந்த மோசடிகள் எந்த அளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த முறை, சைபர் குற்றவாளிகள் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரையே பயன்படுத்தி, ஒரு மூதாட்டியிடமிருந்து சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாயை மோசடியாகப் பறித்துள்ளனர். காவல்துறை மற்றும் சிபிஐ விசாரணை என்ற பெயரில் நடந்த இந்த நாடகத்தில், அந்தப் பெண் பல வாரங்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, மனதளவில் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பில் தொடங்கிய பயம் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக வசித்து வரும் அந்த மூதாட்டிக்கு, கடந்த ஆகஸ்ட் 18 அன்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. “உங்கள் அழைப்பை கொலாபா காவல் நிலையத்துடன் இணைக்கிறேன்” என்று கூறிய அந்த நபர், அழைப்பைத் துண்டித்துள்ளார். சில நிமிடங்களில், அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை காவல் நிலைய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, “உங்கள் ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார். இந்த தகவலைக் கேட்ட அந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்கு அப்படி எந்தக் கணக்கும் இல்லை என்றும், தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். கைது மிரட்டலும் போலி ஆவணங்களும் அவரின் விளக்கத்தை கேட்காமல், மோசடி நபர்கள் “இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உங்கள் பெயரும் அதில் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்” என்று மிரட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பான போலி கடிதங்களையும், சட்ட ஆவணங்களைப் போல வடிவமைக்கப்பட்ட சில பதிவுகளையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். “நாங்கள் விசாரணை நடத்துகிறோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்” என்று அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தை யாரிடமும் சொன்னால், அவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, அந்த மூதாட்டி கடும் பயத்தில் ஆழ்ந்துள்ளார். தனது வங்கிக் கணக்குகள், முதலீடுகள், வீட்டுத் தகவல்கள் என அனைத்தையும் அவர்களிடம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். ‘ஆன்லைன் நீதிமன்றம்’ என்ற நாடகம் ஒரு கட்டத்தில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், 24 மணிநேரமும் அவர்களது கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். விசாரணை நடத்தும் அதிகாரியின் பெயர் எஸ்.கே. ஜெயஸ்வால் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் அவரது வாழ்க்கையைப் பற்றி 2 முதல் 3 பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லியுள்ளனர். “இது உங்கள் நிரபராதத்தை நிரூபிக்க உதவும்” என்று கூறி, அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். பின்னர் நடந்தது இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வீடியோ காலில் வந்த ஒருவர், தன்னை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்கள் வழக்கு தீவிரமானது. ஆனால் நீங்கள் நிரபராதி” என்று கூறி, அவரது முதலீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். அந்தப் பெண், இது உண்மையான நீதிமன்ற விசாரணை என்றே நம்பியுள்ளார். கணக்குகளை காலி செய்யச் செய்த திட்டம் சிறிது நேரத்தில், “உங்கள் கணக்கில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது” என்று கூறி, விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பணமாக்கச் சொன்னுள்ளனர். பின்னர், அந்த தொகையில் 90 முதல் 95 சதவீதத்தை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கைது பயத்தில் இருந்த அந்த மூதாட்டி, அவர்கள் சொன்னபடி பணத்தை அனுப்பியுள்ளார். இதற்குப் பிறகு, தொடர்ந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டல்கள் வந்துள்ளன. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடந்த இந்த மோசடியில், மொத்தமாக 3 கோடியே 71 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைச் சொல்லி காலம் கடத்தினர். இதன் பின்னர்தான் தான் மோசடியில் சிக்கியிருப்பதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் – வெளிவந்த உண்மை அக்டோபர் 13 அன்று, அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாட்ஸ்ஆப் உரையாடல்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல்துறையோ, சிபிஐயோ ஒருபோதும் வாட்ஸ்ஆப், வீடியோ கால் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக விசாரணை நடத்துவதில்லை. கைது செய்வதாக மிரட்டுவதும் இல்லை. அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால், எந்தத் தகவலையும் பகிராமல் உடனே அந்த எண்ணைத் துண்டித்து, பிளாக் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள், நீதிமன்ற பின்னணி போன்றவை காண்பிக்கப்பட்டாலும், அதனால் நம்ப வேண்டாம். இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம். சைபர் மோசடியில் சிக்கினால், உடனடியாக அரசு நடத்தும் சைபர் குற்ற புகார் தளத்தில் அல்லது உள்ளூர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தாமதமின்றி புகார் அளித்தால், பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியீடு சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜீவா, இதற்கு முன்பு ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் காமெடி, காதல், ஆக்ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த புதிய படத்தில், சமூகப் பின்னணியுடன் கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் அரசியல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக கொண்டு கதை நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்கம், இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் நாள் வசூல் மற்றும் ரசிகர் கருத்துகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடை குறைப்பு என்ற பெயரில் நடந்த விபரீதம் – மதுரை மாணவியின் மரணம்; ஆயுஷ், மருந்து கட்டுப்பாட்டு துறை கடும் எச்சரிக்கை மதுரையில் இளம் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவும் தவறான உடல்நல ஆலோசனைகளின் ஆபத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உடல் எடையை குறைக்க முயன்ற நிலையில், வெங்காரம் என்ற பொருளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக மாணவி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை செல்லூர் அருகே உள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி (19), அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சிறுவயதிலிருந்தே உடல் பருமன் இருந்ததால், எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை அவர் தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு வீடியோவில் கூறப்பட்ட ஆலோசனையை நம்பி, அருகிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் வாங்கிய வெங்காரத்தை கலையரசி உட்கொண்டுள்ளார். இதன் பின்னர், அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பிய நிலையில், அதே இரவு மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவத்திற்கு காரணமான நாட்டு மருந்துக் கடை மற்றும் சமூக வலைதள சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள், எடை குறைப்பு டிப்ஸ் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி, பதிவு விவரம் இல்லாத விளம்பரங்களை நம்புவது ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் துறை அதிகாரிகள் கூறுகையில், “சமூக வலைதளங்களில் போலி முகவரி, தொடர்பு விவரம் இல்லாத விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பது சவாலாக உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பாமல், அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்” என தெரிவித்துள்ளனர். எடை குறைப்பு, ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் விளம்பரங்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கலையரசியின் மரணம், இந்த ஆபத்துகளை உணர்த்தும் ஒரு துயரமான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் வாய்ப்பு இருப்பதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முன்வைத்துள்ள மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமாகும். இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. ஆனால் சமீபத்திய பொருளாதார தரவுகளை ஆய்வு செய்ததில், வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. முந்தைய காலாண்டுகளின் வளர்ச்சி போக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், 2026-ம் ஆண்டு முழுவதற்கான இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என அந்த அறிக்கை கணித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் முழு ஆண்டுக்கான இலக்கான 6.5 சதவீதத்தை விட குறைவாகும். அதே நேரத்தில், உண்மையான (Real) மற்றும் பெயரளவிலான (Nominal) பொருளாதார வளர்ச்சிக்கிடையேயான இடைவெளி தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த இடைவெளி 12 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அது 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த இடைவெளி மேலும் குறையும் என்றும், அதன் விளைவாக உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7 சதவீதமாக இருக்கும் என்றும் எஸ்பிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐ.எம்.எஃப் ‘சி’ தரவரிசை கொடுத்ததால் புதிய சர்ச்சை 2025–26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 8.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 5.6 சதவீத வளர்ச்சியை விட குறிப்பிடத்தக்க உயர்வாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம், உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் இந்தியா தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது எனவும் அரசு தரப்பு கூறுகிறது. அதே நேரத்தில், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் எனவும் அதிகாரப்பூர்வ கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு முற்றிலும் மாறான வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கை, இந்தியாவின் ஜிடிபி மற்றும் தேசிய கணக்குகள் தொடர்பான தரவுகளுக்கு ‘சி’ (C Grade) தரவரிசையை வழங்கியுள்ளது. இதனால், அரசின் வளர்ச்சி கணக்குகள் உண்மையா என்ற கேள்வி எழுந்து, புதிய அரசியல் மற்றும் பொருளாதார விவாதம் வெடித்துள்ளது. அரசியல் மோதல் தீவிரம் இந்த விவகாரத்தை முன்வைத்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பதிவில், “ஐ.எம்.எஃப் தனது ஆண்டு ஆய்வில் இந்தியாவின் தேசிய கணக்குகளுக்கு ஏன் ‘சி’ தரவரிசை வழங்கியது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, “இந்தியாவை ‘பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்று’ என்ற நிலையில் விட்டுச் சென்றவர்கள் இப்போது வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அச்சத்தைப் பரப்புகின்றனர்” என விமர்சனம் செய்தார். ‘சி’ தரவரிசை ஏன்? – ஐ.எம்.எஃப் விளக்கம் நவம்பர் 26ஆம் தேதி வெளியான ஐ.எம்.எஃப் அறிக்கையில், இந்தியாவுக்கு ‘சி’ தரவரிசை வழங்கப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.எம்.எஃப் பொதுவாக தரவுகளை நான்கு வகைகளாக வகைப்படுத்துகிறது: A தரவரிசை – கண்காணிப்புக்கு முழுமையான தரவுகள் B தரவரிசை – சில குறைபாடுகளுடன் போதுமான தரவுகள் C தரவரிசை – கண்காணிப்பை பாதிக்கும் அளவிலான குறைபாடுகள் D தரவரிசை – கடுமையான குறைபாடுகள் கொண்ட தரவுகள் இந்தியாவின் தேசிய கணக்குத் தரவுகள் முறையியல் (methodology) குறைபாடுகளை கொண்டுள்ளதாகவும், அவை பொருளாதார கண்காணிப்பில் தடையாக இருப்பதாகவும் ஐ.எம்.எஃப் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா இன்னும் 2011–12 அடிப்படை ஆண்டை (Base Year) பயன்படுத்தி வருவது இன்றைய பொருளாதார நிலைக்கு பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், உற்பத்தியாளர் விலைக் குறியீட்டுக்கு பதிலாக மொத்த விலைக் குறியீடு பயன்படுத்தப்படுவதால் தரவுகளில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைப்பு சாரா துறை, குடும்பச் செலவுகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தொடர்பான தரவுகள் போதுமான அளவில் பிரதிபலிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாஜக விளக்கம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாஜக, “2011–12 அடிப்படை ஆண்டு என்பது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதையே இப்போது குறை சொல்லுவது முரண்பாடானது” என தெரிவித்துள்ளது. மேலும், 2026 பிப்ரவரியில் புதிய 2022–23 அடிப்படை ஆண்டிற்கு மாற்றம் செய்யப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அமித் மாளவியா கூறினார். சீரான இடைவெளியில் தரவுகள் வழங்கப்படுவதற்காக இந்தியாவுக்கு ஐ.எம்.எஃப் சில பிரிவுகளில் ‘ஏ’ தரவரிசையும் வழங்கியுள்ளதை எதிர்க்கட்சிகள் கவனிக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதார பேராசிரியர் அருண் குமார், “ஜிடிபி கணக்கீடு குறித்து பல ஆண்டுகளாகவே சந்தேகங்கள் எழுந்து வருகின்றன” என்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் தாக்கம் புள்ளிவிவரங்களில் தெரியவில்லை என்றும், சேவைத் துறை கணக்கெடுப்பில் 35% நிறுவனங்கள் இருப்பிடமே தெரியாத நிலையில் தரவு எப்படி சரியாக இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். மேலும், “அமைப்பு சாரா துறை தொடர்ந்து பல அதிர்ச்சிகளை சந்தித்த நிலையில், ஜிடிபி கணக்கீட்டு முறை மாற்றப்படவில்லை. இதுவே பிரச்சினையின் மையம்” என அவர் விளக்குகிறார். உலகளாவிய பிம்பத்துக்கு பாதிப்பா? ‘தி வயர்’ நிறுவனத்தின் நிறுவனர் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான எம்.கே. வேணு, “இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதாரமாக காட்டிக் கொள்ளும் அரசின் முயற்சிக்கு, ஐ.எம்.எஃப் அறிக்கை உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார். அமைப்பு சாரா துறை வளர்ச்சியையும், ஒழுங்கமைக்கப்பட்ட துறை வளர்ச்சியையும் ஒரே அளவுகோலில் கணக்கிடுவது தான் ஜிடிபி புள்ளிவிவரங்களில் தவறுகள் ஏற்படக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.