தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக சீர்குலைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பதிலளித்திருந்தார். “குற்றச் சம்பவங்களைத் தடுப்பதிலும், குற்றவாளிகளை கையாள்வதிலும் எனது தலைமையிலான காவல்துறை திறம்பட செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடுகையில், தி.மு.க ஆட்சியில் பழிக்குப் பழியாக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளன. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றப் பின்னணி உடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், தி.மு.க ஆட்சியில் கொலைகள் அதிகரித்திருப்பதுபோல் தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன” என அவர் கூறியிருந்தார்.
முதல்வர் இவ்வாறு சட்டமன்றத்தில் வலியுறுத்திப் பேசிய 24 மணி நேரம் கூட நிறைவடையாத நிலையில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தொடர் கொலைச் சம்பவங்கள் அரசின் இந்தக் கூற்றுகளை கேள்விக்குறியாக மாற்றியுள்ளன. காரைக்குடியில், பழிக்குப் பழியாக ரௌடி மனோஜ் நடுவழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும், திருத்தணிக்கு அருகே போதைப் பொருள் தொடர்பான தகராறில் கல்லூரி மாணவர் லோகேஷ் உயிரிழந்ததும், மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவங்கள், “பழிக்குப் பழி கொலைகள் குறைந்துவிட்டன” என்ற அரசின் வாதத்துக்கு முற்றிலும் முரணான காட்சியை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப் பொருள் வட்டத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, சட்டம்-ஒழுங்கு மட்டுமல்லாது சமூக பாதுகாப்பு குறித்தும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
வழக்கமாக, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில், காவல்துறையும் உளவுத்துறையும் கூடுதல் விழிப்புடன் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், இப்படியான தொடர் கொலைகள் நிகழ்வது காவல்துறை அலட்சியத்தையும், உளவுத்துறையின் தோல்வியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்டாலும், அவர்கள் தைரியமாக நடுவழியில் கொலை செய்யும் அளவிற்கு துணிச்சல் பெறுவது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.
ஒருபுறம் சட்டமன்றத்தில் “காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது” என முதல்வர் பெருமையாக பேசும் நிலையில், மறுபுறம் மாநிலம் முழுவதும் ரத்தம் சிந்தும் சம்பவங்கள் தொடர்வது, தி.மு.க அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. “சட்டம் கையில் இல்லை, குற்றவாளிகளின் கையில் உள்ளது” என்ற பொதுமக்களின் அச்ச உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சி கோரியிருந்த ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சியாகும். இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வகையில், தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 10 விருப்பச் சின்னங்களில் ‘விசில்’ முதலிடத்தில் இடம்பெற்றிருந்தது. கட்சித் தலைவர் விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஒரு புதிய அரசியல் கட்சிக்கு மாநில அளவில் ஒரே சின்னம் வழங்கப்படுவது, அந்தக் கட்சியின் அடையாளத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ‘விசில்’ சின்னம் எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் மாற்றத்தைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான குரல் அல்லது புதிய அரசியல் தொடக்கத்தின் குறியீடாக இதனை த.வெ.க. பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இதுகுறித்து கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “எங்கள் தலைவர் விரும்பிய விசில் சின்னமே கிடைத்துள்ளது. இது கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய ஆரம்ப கட்டமாகும்” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், அவர்கள் பயன்படுத்தி வந்த ‘டார்ச் லைட்’ சின்னம் பொதுச் சின்னமாக மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சின்னங்களும் இப்போதே கவனம் பெறத் தொடங்கியுள்ளன.
2026-ல் முழுமையாக அப்டேட் ஆகும் ஐபோன்கள்… விபரம் என்ன? செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய அளவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அந்த போட்டியை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய திட்டத்தை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2026-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு AI அடிப்படையிலான மிக முக்கியமான திருப்புமுனை ஆண்டாக அமையக்கூடும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐ போட்டியில் ஏன் பின்னடைவை சந்தித்த ஆப்பிள்? ஓபன் ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலேயே ஏஐ துறையில் தீவிரமாக கால்பதித்துவிட்டன. ChatGPT Google Gemini Microsoft Copilot போன்ற ஏஐ சேவைகள் மிக வேகமாக வளர்ச்சி கண்டன. இதற்குப் பின்னணியாக, ஆப்பிள் 2024-ஆம் ஆண்டில்தான் ‘Apple Intelligence’ என்ற தனது ஏஐ தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதனால், போட்டியாளர்களை விட ஆப்பிள் சற்றே தாமதமாக ஏஐ பயணத்தை தொடங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. Apple Intelligence: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? Apple Intelligence மூலம், Writing Tools Clean Up (புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்கும் வசதி) On-device AI processing போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், கூகுள் ஜெமினி ChatGPT Copilot போன்ற ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிளின் ஏஐ அம்சங்கள் அதே அளவிலான திறனை வழங்கவில்லை என பல தொழில்நுட்ப விமர்சகர்கள் கூறினர். புதுப்பிக்கப்பட்ட Siri – இன்னும் முழுமை பெறவில்லை Apple Intelligence-இன் முக்கிய அங்கமாக கருதப்பட்ட புதுப்பிக்கப்பட்ட Siri, இன்னும் முழுமையான ஏஐ அசிஸ்டென்ட் அனுபவத்தை வழங்கவில்லை என்பதே ஆப்பிள் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உள்ளது. இயற்கையான உரையாடல் திறன் கான்டெக்ஸ்ட் புரிதல் ஆப்-டூ-ஆப் செயல்பாடுகள் போன்ற விஷயங்களில் Siri, போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளதாக விமர்சனம் செய்யப்படுகிறது. 2026-ல் ஆப்பிளின் ‘மாஸ்டர் பிளான்’ என்ன? தொழில்நுட்ப வட்டார தகவல்களின் படி, 2026-ல்: முழுமையாக ஏஐ-ஆதரவு பெற்ற Siri ஐபோன்களில் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட Apple Intelligence அதிக சக்தி வாய்ந்த on-device AI processing தனியுரிமையை மையமாகக் கொண்ட ஏஐ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம், AI போட்டியில் ஆப்பிள் தன் இழந்த முன்னிலையை மீட்டெடுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. முடிவாக AI உலகில் தாமதமாக நுழைந்தாலும், “சரியான நேரத்தில், சரியான முறையில்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதே ஆப்பிளின் நீண்டகால யுக்தியாக இருக்கலாம். 2026-ல் அப்டேட் ஆகும் ஐபோன்கள், வெறும் ஹார்ட்வேர் அப்டேட் அல்ல முழுமையான AI அனுபவத்தை வழங்கும் சாதனங்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், அதையே ஆயுதமாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’, ‘ஆன்லைன் விசாரணை’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மூத்த குடிமக்களை மனதளவில் மிரட்டி, அவர்கள் வாழ்நாள் சேமிப்பை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மும்பையில் நடந்த சமீபத்திய ஒரு சம்பவம், இந்த மோசடிகள் எந்த அளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த முறை, சைபர் குற்றவாளிகள் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரையே பயன்படுத்தி, ஒரு மூதாட்டியிடமிருந்து சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாயை மோசடியாகப் பறித்துள்ளனர். காவல்துறை மற்றும் சிபிஐ விசாரணை என்ற பெயரில் நடந்த இந்த நாடகத்தில், அந்தப் பெண் பல வாரங்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, மனதளவில் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பில் தொடங்கிய பயம் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக வசித்து வரும் அந்த மூதாட்டிக்கு, கடந்த ஆகஸ்ட் 18 அன்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. “உங்கள் அழைப்பை கொலாபா காவல் நிலையத்துடன் இணைக்கிறேன்” என்று கூறிய அந்த நபர், அழைப்பைத் துண்டித்துள்ளார். சில நிமிடங்களில், அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை காவல் நிலைய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, “உங்கள் ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார். இந்த தகவலைக் கேட்ட அந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்கு அப்படி எந்தக் கணக்கும் இல்லை என்றும், தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். கைது மிரட்டலும் போலி ஆவணங்களும் அவரின் விளக்கத்தை கேட்காமல், மோசடி நபர்கள் “இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உங்கள் பெயரும் அதில் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்” என்று மிரட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பான போலி கடிதங்களையும், சட்ட ஆவணங்களைப் போல வடிவமைக்கப்பட்ட சில பதிவுகளையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். “நாங்கள் விசாரணை நடத்துகிறோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்” என்று அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தை யாரிடமும் சொன்னால், அவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, அந்த மூதாட்டி கடும் பயத்தில் ஆழ்ந்துள்ளார். தனது வங்கிக் கணக்குகள், முதலீடுகள், வீட்டுத் தகவல்கள் என அனைத்தையும் அவர்களிடம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். ‘ஆன்லைன் நீதிமன்றம்’ என்ற நாடகம் ஒரு கட்டத்தில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், 24 மணிநேரமும் அவர்களது கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். விசாரணை நடத்தும் அதிகாரியின் பெயர் எஸ்.கே. ஜெயஸ்வால் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் அவரது வாழ்க்கையைப் பற்றி 2 முதல் 3 பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லியுள்ளனர். “இது உங்கள் நிரபராதத்தை நிரூபிக்க உதவும்” என்று கூறி, அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். பின்னர் நடந்தது இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வீடியோ காலில் வந்த ஒருவர், தன்னை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்கள் வழக்கு தீவிரமானது. ஆனால் நீங்கள் நிரபராதி” என்று கூறி, அவரது முதலீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். அந்தப் பெண், இது உண்மையான நீதிமன்ற விசாரணை என்றே நம்பியுள்ளார். கணக்குகளை காலி செய்யச் செய்த திட்டம் சிறிது நேரத்தில், “உங்கள் கணக்கில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது” என்று கூறி, விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பணமாக்கச் சொன்னுள்ளனர். பின்னர், அந்த தொகையில் 90 முதல் 95 சதவீதத்தை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கைது பயத்தில் இருந்த அந்த மூதாட்டி, அவர்கள் சொன்னபடி பணத்தை அனுப்பியுள்ளார். இதற்குப் பிறகு, தொடர்ந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டல்கள் வந்துள்ளன. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடந்த இந்த மோசடியில், மொத்தமாக 3 கோடியே 71 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைச் சொல்லி காலம் கடத்தினர். இதன் பின்னர்தான் தான் மோசடியில் சிக்கியிருப்பதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் – வெளிவந்த உண்மை அக்டோபர் 13 அன்று, அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாட்ஸ்ஆப் உரையாடல்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல்துறையோ, சிபிஐயோ ஒருபோதும் வாட்ஸ்ஆப், வீடியோ கால் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக விசாரணை நடத்துவதில்லை. கைது செய்வதாக மிரட்டுவதும் இல்லை. அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால், எந்தத் தகவலையும் பகிராமல் உடனே அந்த எண்ணைத் துண்டித்து, பிளாக் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள், நீதிமன்ற பின்னணி போன்றவை காண்பிக்கப்பட்டாலும், அதனால் நம்ப வேண்டாம். இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம். சைபர் மோசடியில் சிக்கினால், உடனடியாக அரசு நடத்தும் சைபர் குற்ற புகார் தளத்தில் அல்லது உள்ளூர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தாமதமின்றி புகார் அளித்தால், பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியீடு சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜீவா, இதற்கு முன்பு ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் காமெடி, காதல், ஆக்ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த புதிய படத்தில், சமூகப் பின்னணியுடன் கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் அரசியல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக கொண்டு கதை நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்கம், இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் நாள் வசூல் மற்றும் ரசிகர் கருத்துகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடை குறைப்பு என்ற பெயரில் நடந்த விபரீதம் – மதுரை மாணவியின் மரணம்; ஆயுஷ், மருந்து கட்டுப்பாட்டு துறை கடும் எச்சரிக்கை மதுரையில் இளம் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவும் தவறான உடல்நல ஆலோசனைகளின் ஆபத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உடல் எடையை குறைக்க முயன்ற நிலையில், வெங்காரம் என்ற பொருளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக மாணவி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை செல்லூர் அருகே உள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி (19), அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சிறுவயதிலிருந்தே உடல் பருமன் இருந்ததால், எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை அவர் தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு வீடியோவில் கூறப்பட்ட ஆலோசனையை நம்பி, அருகிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் வாங்கிய வெங்காரத்தை கலையரசி உட்கொண்டுள்ளார். இதன் பின்னர், அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பிய நிலையில், அதே இரவு மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவத்திற்கு காரணமான நாட்டு மருந்துக் கடை மற்றும் சமூக வலைதள சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள், எடை குறைப்பு டிப்ஸ் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி, பதிவு விவரம் இல்லாத விளம்பரங்களை நம்புவது ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் துறை அதிகாரிகள் கூறுகையில், “சமூக வலைதளங்களில் போலி முகவரி, தொடர்பு விவரம் இல்லாத விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பது சவாலாக உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பாமல், அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்” என தெரிவித்துள்ளனர். எடை குறைப்பு, ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் விளம்பரங்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கலையரசியின் மரணம், இந்த ஆபத்துகளை உணர்த்தும் ஒரு துயரமான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 54 வயதுடைய நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. சம்பவத்தின் பின்னணி கீரமங்கலம் அருகிலுள்ள கிராமப் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தவறான முறையில் நடந்துகொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டமான Protection of Children from Sexual Offences Act (POCSO) பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்தனர். நீதிமன்ற தீர்ப்பு வழக்கின் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன்: ரூ.10,000 அபராதம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்புக்குப் பிறகு நடந்தது தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் குற்றவாளி தனது குற்றத்தை மறுத்து, தாம் குற்றம் செய்யவில்லை எனக் கூறியதாக நீதிமன்ற வளாகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் போலீசார் அவரை பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த தீர்ப்பு, சிறார்களுக்கு எதிரான குற்றங்களில் நீதித்துறை கடுமையான அணுகுமுறையைப் பின்பற்றுவதை வெளிப்படுத்துகிறது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உறுதியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற செய்தியையும் இது வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்த தொடர் கொலைச் சம்பவங்களும், சமூக விமர்சகர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளன. கிருஷ்ணகிரியில் இரண்டு முதியவர்கள், அவினாசியில் ஒரு தம்பதி, பவானியில் முக்கியப் பிரமுகர், நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன், சேலத்தைச் சேர்ந்த ரௌடி ஜான், கரூரில் ரௌடி சந்தோஷ் என ஒரே வாரத்தில் நிகழ்ந்த கொலைகள் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இதில், “என் உயிருக்கு ஆபத்து உள்ளது” என காவல்துறையில் புகார் அளித்த பின்னரும், ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் ரௌடி ஜான் காருக்குள் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த 50 பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த பொருட்கள் மீது சாக்கடை கழிவுகளையும் மலத்தையும் வீசிய சம்பவமும் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. காவல்துறையின் கண்காணிப்பு எங்கே என்ற கேள்வியையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. “சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், இரும்புக் கரம் கொண்டு குற்றவாளிகளை ஒடுக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். இது உளவுத்துறையின் தோல்வி” என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஒரே நாளில் மதுரை, கோவை, சிவகங்கை, ஈரோடு ஆகிய இடங்களில் நான்கு கொலைகள் நடந்துள்ளன. ‘குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்’ என முதல்வர் பேசிக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. தினசரி இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன” எனக் கடுமையாக விமர்சித்தார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பட்டப்பகலில் நடைபெறும் கொலைகளைப் பார்க்கும்போது, வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறை இருக்கிறதா என்றே கேள்வி எழும் அளவுக்கு சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” எனச் சாடியுள்ளார். இதற்கிடையே, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு கடந்த 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள் நடந்துள்ளதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது” என புள்ளிவிவரங்களுடன் அரசை விமர்சித்துள்ளார். மேலும், “சட்டம்–ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கத்தான் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை திமுக முன்னிலைப்படுத்துகிறது” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் குற்றம் சாட்டியுள்ளனர். “தமிழகத்தில் படுகொலைகள் நடக்காத நாட்களே இல்லை” என அண்ணாமலையும் கருத்துத் தெரிவித்துள்ளார். தொடர் கொலைகள், பட்டப்பகல் வன்முறைகள், விமர்சகர்கள் மீது தாக்குதல் என தொடரும் சம்பவங்கள், தமிழ்நாட்டின் சட்டம்–ஒழுங்கு நிலை உண்மையிலேயே கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக எழுப்பியுள்ளது.
டெல்லி: வாடகைக்கு இருக்கும் ஒருவர், எத்தனை ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்திருந்தாலும், அந்த வீட்டைத் தனது சொந்தம் எனக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக, “Adverse Possession” (எதிர் உடமை உரிமை) என்ற அடிப்படையில் வாடகை வீட்டை கைப்பற்ற முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில், வாடகை வீட்டில் நீண்ட காலமாக வசித்து வந்த நபர், “பல ஆண்டுகளாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அந்த வீடு தனக்கு உரிமையாகிவிட்டது” எனக் கூறி உரிமை கோரினார். ஆனால், அந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக நிராகரித்தது. நீதிபதிகள் கூறுகையில், வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு சொத்தில் வசிப்பது என்பது உரிமையாளரின் அனுமதியுடன் நிகழும் செயல். அதனால், அந்த வசிப்பு ஒருபோதும் எதிர் உடமை (Adverse Possession) ஆக மாற முடியாது. சொத்தின் மீது உரிமை கோர வேண்டுமானால், உரிமையாளரின் உரிமையை வெளிப்படையாக மறுத்து, சட்டப்படி நிரந்தரமாக கைப்பற்றியிருக்க வேண்டும். வாடகை வசிப்பில் இது சாத்தியமில்லை எனத் தெரிவித்தனர். மேலும், வாடகைக்கு இருப்பவர் சொத்தின் உண்மையான உரிமையாளரை அறிந்தவராகவே இருப்பதால், அவரின் வசிப்பு சட்டபூர்வமான அனுமதியின் கீழ் நடைபெறுகிறது. எனவே, “நான் பல ஆண்டுகள் இருந்தேன்” என்ற காரணத்தால் சொந்த உரிமை உருவாகாது என்றும் நீதிமன்றம் விளக்கமளித்தது. இந்த தீர்ப்பு, • நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசிப்போர் • உரிமை கோரல் தொடர்பான நிலுவை வழக்குகள் • நில உரிமையாளர்கள் – வாடகையாளர்கள் இடையிலான சட்ட சிக்கல்கள் ஆகிய அனைத்துக்கும் முக்கியமான சட்ட வழிகாட்டுதலாக பார்க்கப்படுகிறது. உரிமை என்பது சட்ட ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும்; கால அளவின் அடிப்படையில் அல்ல என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதி செய்துள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.