புதுடெல்லி:
நடப்பு 2025–26 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என சர்வதேச நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. உலகளாவிய வர்த்தக நிச்சயமின்மை அதிகரித்து வரும் சூழலிலும், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா வரிகளை உயர்த்தியதும், சில நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டதுமான காரணங்களால், உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட உலக பொருளாதார முன்னோக்கு அறிக்கையில் சர்வதேச நிதியம் இந்த கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2025–26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் காட்டிய வலுவான செயல்பாடு மொத்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா விதித்த வரி உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை இந்தியாவின் உள்நாட்டு செயல்பாடு பெரும்பாலும் ஈடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நடப்பு நிதியாண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட வேகம் அடுத்த காலாண்டுகளில் சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, 2026ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாகக் குறையலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இது 3.1 சதவீதமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பணவீக்கம் தொடர்ந்து குறையும் போக்கு காணப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வளர்ந்த பொருளாதார நாடுகள்: 1.6% வளர்ச்சி
வளர்ந்து வரும் நாடுகள்: 4.2% வளர்ச்சி
(அடுத்த ஆண்டில் இது சுமார் 0.2% குறையலாம்)
வளர்ந்த நாடுகளுள் ஸ்பெயின் மிக வேகமாக வளரும் நாடாக இருக்கும்; அந்நாட்டின் வளர்ச்சி வீதம் 2.9 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா: 1.9% (கடந்த ஆண்டு 2.4%)
பிரேசில்: 2.4%
கனடா: 1.2%
ஜப்பான்: 1.1%
சீனா: 4.8%
இந்தியாவின் வளர்ச்சி உலக அளவில் கணிசமாக உயர்ந்த நிலையில் தொடர்ந்தாலும்,
உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டுகளில் மெல்லக் குறையும் போக்கே காணப்படும் என சர்வதேச நிதியம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சி கோரியிருந்த ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சியாகும். இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வகையில், தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 10 விருப்பச் சின்னங்களில் ‘விசில்’ முதலிடத்தில் இடம்பெற்றிருந்தது. கட்சித் தலைவர் விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஒரு புதிய அரசியல் கட்சிக்கு மாநில அளவில் ஒரே சின்னம் வழங்கப்படுவது, அந்தக் கட்சியின் அடையாளத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ‘விசில்’ சின்னம் எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் மாற்றத்தைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான குரல் அல்லது புதிய அரசியல் தொடக்கத்தின் குறியீடாக இதனை த.வெ.க. பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இதுகுறித்து கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “எங்கள் தலைவர் விரும்பிய விசில் சின்னமே கிடைத்துள்ளது. இது கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய ஆரம்ப கட்டமாகும்” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், அவர்கள் பயன்படுத்தி வந்த ‘டார்ச் லைட்’ சின்னம் பொதுச் சின்னமாக மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சின்னங்களும் இப்போதே கவனம் பெறத் தொடங்கியுள்ளன.
2026-ல் முழுமையாக அப்டேட் ஆகும் ஐபோன்கள்… விபரம் என்ன? செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய அளவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அந்த போட்டியை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய திட்டத்தை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2026-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு AI அடிப்படையிலான மிக முக்கியமான திருப்புமுனை ஆண்டாக அமையக்கூடும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐ போட்டியில் ஏன் பின்னடைவை சந்தித்த ஆப்பிள்? ஓபன் ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலேயே ஏஐ துறையில் தீவிரமாக கால்பதித்துவிட்டன. ChatGPT Google Gemini Microsoft Copilot போன்ற ஏஐ சேவைகள் மிக வேகமாக வளர்ச்சி கண்டன. இதற்குப் பின்னணியாக, ஆப்பிள் 2024-ஆம் ஆண்டில்தான் ‘Apple Intelligence’ என்ற தனது ஏஐ தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதனால், போட்டியாளர்களை விட ஆப்பிள் சற்றே தாமதமாக ஏஐ பயணத்தை தொடங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. Apple Intelligence: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? Apple Intelligence மூலம், Writing Tools Clean Up (புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்கும் வசதி) On-device AI processing போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், கூகுள் ஜெமினி ChatGPT Copilot போன்ற ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிளின் ஏஐ அம்சங்கள் அதே அளவிலான திறனை வழங்கவில்லை என பல தொழில்நுட்ப விமர்சகர்கள் கூறினர். புதுப்பிக்கப்பட்ட Siri – இன்னும் முழுமை பெறவில்லை Apple Intelligence-இன் முக்கிய அங்கமாக கருதப்பட்ட புதுப்பிக்கப்பட்ட Siri, இன்னும் முழுமையான ஏஐ அசிஸ்டென்ட் அனுபவத்தை வழங்கவில்லை என்பதே ஆப்பிள் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உள்ளது. இயற்கையான உரையாடல் திறன் கான்டெக்ஸ்ட் புரிதல் ஆப்-டூ-ஆப் செயல்பாடுகள் போன்ற விஷயங்களில் Siri, போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளதாக விமர்சனம் செய்யப்படுகிறது. 2026-ல் ஆப்பிளின் ‘மாஸ்டர் பிளான்’ என்ன? தொழில்நுட்ப வட்டார தகவல்களின் படி, 2026-ல்: முழுமையாக ஏஐ-ஆதரவு பெற்ற Siri ஐபோன்களில் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட Apple Intelligence அதிக சக்தி வாய்ந்த on-device AI processing தனியுரிமையை மையமாகக் கொண்ட ஏஐ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம், AI போட்டியில் ஆப்பிள் தன் இழந்த முன்னிலையை மீட்டெடுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. முடிவாக AI உலகில் தாமதமாக நுழைந்தாலும், “சரியான நேரத்தில், சரியான முறையில்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதே ஆப்பிளின் நீண்டகால யுக்தியாக இருக்கலாம். 2026-ல் அப்டேட் ஆகும் ஐபோன்கள், வெறும் ஹார்ட்வேர் அப்டேட் அல்ல முழுமையான AI அனுபவத்தை வழங்கும் சாதனங்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், அதையே ஆயுதமாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’, ‘ஆன்லைன் விசாரணை’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மூத்த குடிமக்களை மனதளவில் மிரட்டி, அவர்கள் வாழ்நாள் சேமிப்பை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மும்பையில் நடந்த சமீபத்திய ஒரு சம்பவம், இந்த மோசடிகள் எந்த அளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த முறை, சைபர் குற்றவாளிகள் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரையே பயன்படுத்தி, ஒரு மூதாட்டியிடமிருந்து சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாயை மோசடியாகப் பறித்துள்ளனர். காவல்துறை மற்றும் சிபிஐ விசாரணை என்ற பெயரில் நடந்த இந்த நாடகத்தில், அந்தப் பெண் பல வாரங்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, மனதளவில் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பில் தொடங்கிய பயம் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக வசித்து வரும் அந்த மூதாட்டிக்கு, கடந்த ஆகஸ்ட் 18 அன்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. “உங்கள் அழைப்பை கொலாபா காவல் நிலையத்துடன் இணைக்கிறேன்” என்று கூறிய அந்த நபர், அழைப்பைத் துண்டித்துள்ளார். சில நிமிடங்களில், அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை காவல் நிலைய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, “உங்கள் ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார். இந்த தகவலைக் கேட்ட அந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்கு அப்படி எந்தக் கணக்கும் இல்லை என்றும், தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். கைது மிரட்டலும் போலி ஆவணங்களும் அவரின் விளக்கத்தை கேட்காமல், மோசடி நபர்கள் “இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உங்கள் பெயரும் அதில் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்” என்று மிரட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பான போலி கடிதங்களையும், சட்ட ஆவணங்களைப் போல வடிவமைக்கப்பட்ட சில பதிவுகளையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். “நாங்கள் விசாரணை நடத்துகிறோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்” என்று அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தை யாரிடமும் சொன்னால், அவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, அந்த மூதாட்டி கடும் பயத்தில் ஆழ்ந்துள்ளார். தனது வங்கிக் கணக்குகள், முதலீடுகள், வீட்டுத் தகவல்கள் என அனைத்தையும் அவர்களிடம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். ‘ஆன்லைன் நீதிமன்றம்’ என்ற நாடகம் ஒரு கட்டத்தில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், 24 மணிநேரமும் அவர்களது கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். விசாரணை நடத்தும் அதிகாரியின் பெயர் எஸ்.கே. ஜெயஸ்வால் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் அவரது வாழ்க்கையைப் பற்றி 2 முதல் 3 பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லியுள்ளனர். “இது உங்கள் நிரபராதத்தை நிரூபிக்க உதவும்” என்று கூறி, அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். பின்னர் நடந்தது இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வீடியோ காலில் வந்த ஒருவர், தன்னை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்கள் வழக்கு தீவிரமானது. ஆனால் நீங்கள் நிரபராதி” என்று கூறி, அவரது முதலீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். அந்தப் பெண், இது உண்மையான நீதிமன்ற விசாரணை என்றே நம்பியுள்ளார். கணக்குகளை காலி செய்யச் செய்த திட்டம் சிறிது நேரத்தில், “உங்கள் கணக்கில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது” என்று கூறி, விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பணமாக்கச் சொன்னுள்ளனர். பின்னர், அந்த தொகையில் 90 முதல் 95 சதவீதத்தை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கைது பயத்தில் இருந்த அந்த மூதாட்டி, அவர்கள் சொன்னபடி பணத்தை அனுப்பியுள்ளார். இதற்குப் பிறகு, தொடர்ந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டல்கள் வந்துள்ளன. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடந்த இந்த மோசடியில், மொத்தமாக 3 கோடியே 71 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைச் சொல்லி காலம் கடத்தினர். இதன் பின்னர்தான் தான் மோசடியில் சிக்கியிருப்பதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் – வெளிவந்த உண்மை அக்டோபர் 13 அன்று, அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாட்ஸ்ஆப் உரையாடல்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல்துறையோ, சிபிஐயோ ஒருபோதும் வாட்ஸ்ஆப், வீடியோ கால் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக விசாரணை நடத்துவதில்லை. கைது செய்வதாக மிரட்டுவதும் இல்லை. அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால், எந்தத் தகவலையும் பகிராமல் உடனே அந்த எண்ணைத் துண்டித்து, பிளாக் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள், நீதிமன்ற பின்னணி போன்றவை காண்பிக்கப்பட்டாலும், அதனால் நம்ப வேண்டாம். இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம். சைபர் மோசடியில் சிக்கினால், உடனடியாக அரசு நடத்தும் சைபர் குற்ற புகார் தளத்தில் அல்லது உள்ளூர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தாமதமின்றி புகார் அளித்தால், பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எடை குறைப்பு என்ற பெயரில் நடந்த விபரீதம் – மதுரை மாணவியின் மரணம்; ஆயுஷ், மருந்து கட்டுப்பாட்டு துறை கடும் எச்சரிக்கை மதுரையில் இளம் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவும் தவறான உடல்நல ஆலோசனைகளின் ஆபத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உடல் எடையை குறைக்க முயன்ற நிலையில், வெங்காரம் என்ற பொருளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக மாணவி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை செல்லூர் அருகே உள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி (19), அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சிறுவயதிலிருந்தே உடல் பருமன் இருந்ததால், எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை அவர் தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு வீடியோவில் கூறப்பட்ட ஆலோசனையை நம்பி, அருகிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் வாங்கிய வெங்காரத்தை கலையரசி உட்கொண்டுள்ளார். இதன் பின்னர், அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பிய நிலையில், அதே இரவு மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவத்திற்கு காரணமான நாட்டு மருந்துக் கடை மற்றும் சமூக வலைதள சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள், எடை குறைப்பு டிப்ஸ் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி, பதிவு விவரம் இல்லாத விளம்பரங்களை நம்புவது ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் துறை அதிகாரிகள் கூறுகையில், “சமூக வலைதளங்களில் போலி முகவரி, தொடர்பு விவரம் இல்லாத விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பது சவாலாக உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பாமல், அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்” என தெரிவித்துள்ளனர். எடை குறைப்பு, ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் விளம்பரங்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கலையரசியின் மரணம், இந்த ஆபத்துகளை உணர்த்தும் ஒரு துயரமான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியீடு சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜீவா, இதற்கு முன்பு ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் காமெடி, காதல், ஆக்ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த புதிய படத்தில், சமூகப் பின்னணியுடன் கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் அரசியல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக கொண்டு கதை நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்கம், இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் நாள் வசூல் மற்றும் ரசிகர் கருத்துகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: 2024–25 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் – செப்டம்பர் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், வரி செலுத்துவோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள்: ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருந்தால் வருமான வரி இல்லை மற்ற வரி செலுத்துவோர்: ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு இதனால் வரி செலுத்த வேண்டியதில்லை என்றாலும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா? என்ற குழப்பம் பலரிடமும் நிலவுகிறது. இந்த நிலையில், வருமான வரிக் கணக்கு தொடர்பான அடிப்படை விதிகள் குறித்து பட்டயக் கணக்காளர் மற்றும் வரி நிபுணர் கரீம் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். யாரெல்லாம் கட்டாயம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்? ஒரு நபரின் மொத்த ஆண்டு வருமானம் (Section 80 கீழ் விலக்குகளைப் பெறுவதற்கு முன்பு) அடிப்படை விலக்கு வரம்பை மீறினால், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம். வயது அடிப்படையில் வரம்புகள்: 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்: ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மேல் இருந்தால் மூத்த குடிமக்கள் (60–80 வயது): ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் இருந்தால் சூப்பர் மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேல்): ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் இந்த வரம்புகளை மீறினால், வரி செலுத்த வேண்டியதில்லை என்றாலும் ITR தாக்கல் கட்டாயம். நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் நிறுவனங்கள் (Companies): லாபம் இருந்தாலோ, நஷ்டம் ஏற்பட்டாலோ எந்த நிறுவனமும் வருமான வரிக் கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? அபராதம் விதிக்கப்படலாம் வருமான வரி திருப்பிச் செலுத்தல் (Refund) கிடைக்காது எதிர்காலத்தில் கடன், வீட்டு கடன், விசா போன்றவற்றில் சிக்கல் ஏற்படலாம் தாமதமாக தாக்கல் செய்தால் கூடுதல் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் முக்கிய குறிப்பு வரி செலுத்த வேண்டியதில்லை என்பதற்காக, வருமான வரிக் கணக்கை தவிர்க்க முடியாது. வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறினால், ITR தாக்கல் செய்வது சட்டபூர்வமான கடமை ஆகும்.
புதுடெல்லி: உலகளாவிய அளவில் வெளிப்புறச் சூழல் நிலையற்றதாக இருந்தாலும், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து உயர் வளர்ச்சியை பதிவு செய்யும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். நிதி நிலைத்தன்மை தொடர்பான ரிசர்வ் வங்கி ஆவணத்தின் முன்னுரையில் அவர் கூறியுள்ளதாவது: நிதி நிலைத்தன்மை – தொடர்ச்சியான இலக்கு நிதி நிலைத்தன்மையை பாதுகாப்பதும், நிதி அமைப்பை மேலும் வலுப்படுத்துவதும் ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கமாகும். நிதி நிலைத்தன்மை என்பது ஒரே கட்டத்தில் அடையப்படும் இலக்கல்ல; அது தொடர்ச்சியான செயல்முறை என நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகள் புரிந்துகொண்டுள்ளன. வளர்ச்சியை ஊக்குவித்தல், நுகர்வோரை பாதுகாப்பது மற்றும் நிதி அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவை சம அளவில் முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார். பொறுப்பான புத்தாக்கம் அவசியம் கொள்கை வகுப்பாளர்கள் செய்யக்கூடிய மிக முக்கிய பங்களிப்பு என்பது, வலுவானதும், அதிர்ச்சிகளை தாங்கக்கூடியதுமான நிதி அமைப்பை உருவாக்குவது மற்றும் அதில் பொறுப்பான புத்தாக்கத்தை ஊக்குவிப்பது என ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் – வலுவான அடித்தளம் வலுவான பொருளாதார வளர்ச்சி, மிதமான பணவீக்கம், நிதி நிறுவனங்களின் ஆரோக்கியமான இருப்பு நிலை மற்றும் விவேகமான கொள்கை சீர்திருத்தங்கள் ஆகிய காரணங்களால், இந்திய பொருளாதாரமும் நிதி அமைப்பும் நல்ல நிலைத்தன்மையுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வெளிப்புறச் சவால்களிடையிலும் வளர்ச்சி உலகளாவிய பொருளாதார சூழல் சாதகமற்றதாக இருந்தாலும், உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டின் வலுவான ஆதரவால் இந்திய பொருளாதாரம் உயர் வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அரண்கள் உருவாக்கம் அதே நேரத்தில், வெளிப்புற காரணிகளால் ஏற்படக்கூடிய குறுகிய கால சவால்களையும் ரிசர்வ் வங்கி உணர்ந்துள்ளதாக கூறிய அவர், பொருளாதாரத்தையும் நிதி அமைப்பையும் சாத்தியமான அதிர்ச்சிகளிலிருந்து பாதுகாக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
மத்திய பட்ஜெட்டில் அமைதியாக மாற்றப்பட்ட 5 முக்கிய விதிகள் என்ன? பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், சாமானிய மக்களை நேரடியாக கவரும் பெரிய அறிவிப்புகள் இல்லை என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. ஆனால், பட்ஜெட் உரையில் அதிக கவனம் பெறாத சில மாற்றங்கள், நீண்டகாலத்தில் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், பட்ஜெட்டில் quietly மாற்றப்பட்ட 5 முக்கிய விதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 1. சாவரின் தங்கப் பத்திரங்கள்: வரி விலக்கில் மாற்றம் முன்பு எப்படி இருந்தது? சாவரின் தங்கப் பத்திரங்களை (SGB) முதிர்வுக் காலம் வரை வைத்திருந்தால், கிடைக்கும் லாபத்திற்கு மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) விலக்கு வழங்கப்பட்டது. இந்தச் சலுகை, • ரிசர்வ் வங்கி நேரடியாக வெளியிட்ட பத்திரங்கள் • பங்குச் சந்தை மூலம் வாங்கப்பட்ட பத்திரங்கள் — இரண்டுக்கும் பொருந்தியது. இப்போது மாற்றம் என்ன? பங்குச் சந்தை மூலம் வாங்கப்படும் தங்கப் பத்திரங்களுக்கு வழங்கப்பட்ட மூலதன ஆதாய வரி விலக்கை அரசு ரத்து செய்துள்ளது. 👉 ஏப்ரல் 1, 2026 முதல், ரிசர்வ் வங்கி வெளியிடும் போது நேரடியாக வாங்கி, முதிர்வு வரை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வரி விலக்கு கிடைக்கும். பங்குச் சந்தையில் வாங்கி வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், முதிர்வின்போது கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். 2. ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தில் வரி உயர்வு 2026 பட்ஜெட்டின் முக்கியமான, ஆனால் குறைவாக பேசப்பட்ட அறிவிப்புகளில் இதுவும் ஒன்று. இதுவரை இருந்த நிலை: • ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்திற்கு STT – 0.02% • ஆப்ஷன்ஸ் வர்த்தகத்திற்கு STT – 0.10% புதிய மாற்றம்: • ஃபியூச்சர்ஸ் STT – 0.05% • ஆப்ஷன்ஸ் STT – 0.15% 👉 உதாரணமாக, முன்பு ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஃபியூச்சர்ஸ் விற்பனைக்கு ரூ.20 STT செலுத்த வேண்டியிருந்தது. இனி அது ரூ.50 ஆகும். இதனால், அடிக்கடி வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களின் மொத்த லாபம் குறையக்கூடும். 3. NRI-களிடமிருந்து சொத்து வாங்கும் நடைமுறை எளிதாக்கம் இதுவரை இருந்த சிக்கல்: வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து (NRI) சொத்து வாங்கும் போது, TDS செலுத்துவதற்காக தனியாக TAN எண் பெற வேண்டியிருந்தது. பட்ஜெட் மாற்றம்: இனி NRI சொத்து வாங்கும்போது TAN எண் தேவையில்லை. 👉 PAN எண்ணை பயன்படுத்தியே TDS செலுத்தலாம். இதன் மூலம், ஆவணப் பணிகளும் நேர விரயமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அபராத விதிகள் தற்போதைய நிலை: கிரிப்டோ பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை வரித்துறைக்கு அளிக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், அதை முழுமையாகப் பின்பற்றாத நிலை தொடர்கிறது. புதிய விதி: 👉 ஏப்ரல் 1, 2026 முதல், • தகவல் வழங்கத் தவறினால் – நாளொன்றுக்கு ரூ.200 அபராதம் • தவறான தகவல்களை திருத்தாமல் விட்டால் – அதிகபட்சம் ரூ.50,000 அபராதம் இதனால், கிரிப்டோ முதலீட்டாளர்கள் மற்றும் பரிவர்த்தனை தளங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 5. வெளிநாட்டில் படிப்பு & மருத்துவ செலவுகளுக்கான பண அனுப்புதலில் சலுகை இதுவரை: LRS (Liberalised Remittance Scheme) கீழ், கல்வி மற்றும் மருத்துவத்திற்காக ரூ.10 லட்சத்துக்கு மேல் அனுப்பும் தொகைக்கு 5% TCS வசூலிக்கப்பட்டது. பட்ஜெட் மாற்றம்: 👉 TCS விகிதம் 5% → 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் • மருத்துவ சிகிச்சைக்காக பணம் அனுப்பும் குடும்பங்கள் — பெரிதும் பயனடைவார்கள். TCS & LRS என்றால் என்ன? (சுருக்கமாக) • TCS (Tax Collected at Source): வெளிநாட்டிற்கு பணம் அனுப்பும்போது வங்கிகள் வசூலிக்கும் வரி. இது கூடுதல் வரி அல்ல; வருமான வரி தாக்கலில் சரிசெய்யப்படும். • LRS: இந்தியாவில் வசிப்பவர்கள் ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் வரை வெளிநாட்டிற்கு அனுப்ப அனுமதிக்கும் ரிசர்வ் வங்கியின் திட்டம்.